தி மு க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து வி சி க -வினர் போர்க்கொடி. !
வி சி க
சென்னை: தனியார் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த, திமுக துணைப்பொதுச் செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா, திருமாவளவன் குறித்து பேசியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆ.ராசாவை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என விசிகவினர் விமர்சித்துள்ளனர்.
தலித் மக்களுக்கான தலைவராக மட்டும் அம்பேத்கரை எப்படி பார்க்க முடியாதோ, அதேபோல எங்கள் கட்சியையும், அம்மக்களுக்கான கட்சியாக மட்டும் பார்க்க வேண்டாம் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்படி இருக்கையில்தான், திருமாவளவன் குறித்து ஆ.ராசா கூறியிருந்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆ.ராசா பேசியது என்ன?
தனியார் யூடியூப் சேனல் ஒன்று, தலைவர்களுடன் மாணவர்கள் என்கிற நிகழ்ச்சியை நடத்தியிருந்தது. அதில் பங்கேற்றிருந்த ஆ. ராசா, திருமாவளவன் சாதி கட்சித் தலைவர் என்று பேசியிருந்தார். விசிக கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதில் திருப்போரூர் மற்றும் நாகப்பட்டினம் இரண்டும் பொது தொகுதிகள். இனி வரும் தேர்தல்களிலும் பொதுத் தொகுதிகளில் அதிக அளவில் போட்டியிட விசிக திட்டமிட்டு வருகிறது.
விசிகவின் முயற்சி
ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்று மட்டும் அல்லாமல், மற்ற அரசியல் கட்சிகளை போல சாதியை கடந்த கட்சியாக இருக்க வேண்டும் என்று விசிக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இப்படி இருக்கையில், திருமாவளவனை சாதி கட்சியின் தலைவர் என்று ஆ.ராசா பேசியிருப்பது, விசிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
விசிகவினர் எதிர்ப்பு
சோஷியல் மீடியாக்களில் ஆ.ராசா மீது விமர்சனங்கள் அதிகரித்தன. விசிகவினர் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தனர். இதற்கெல்லாம் திமுக தரப்பில் இருந்து பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் இல்லாத நிலையில், ஆ.ராசாவை கண்டித்து, பெரம்பலூரில் குன்னம் பேருந்து நிலையத்தில், குன்னம் சட்டமன்ற தொகுதி விசிக செயலாளர் அன்பானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான விசிகவினர் பங்கேற்றிருந்தனர்.
கூட்டணிக்குள் புகைச்சல்
இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஆர்எஸ்எஸ் கைக்கூலி ஆண்டிமுத்து ராசா மீது திமுக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முழக்கமிடப்பட்டது. மேலும், "2ஜி ஊழல்வாதி ஆண்டிமுத்து ராசாவே கண்டிக்கிறோம்" என்றும் விசிகவினர் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
