ஏமன் நாட்டில் கேரள நர்ஸுக்கு மரண தண்டனை. ! மகளை காப்பாற்ற ஏமனில் போராடும் தாய்.!
ஏமன்

ஏமன் நாட்டில் கொலை வழக்கு ஒன்றில் கேரள செவிலியர் நிமிஷா பிரியா என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே கேரள செவிலியரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்படி உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகக் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர் சென்றார். கடந்த 2017ம் ஆண்டில் அவர் ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், கடந்தாண்டு நவ. மாதமே மேல்முறையீட்டு மனுவையும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. அதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபரிடம் இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் தான் தற்போது சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்துள்ளார். அவருக்கு அடுத்த ஒரு மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி நிமிஷா பிரியாவின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா.. இவர் ஏமன் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவரது கணவர் மற்றும் மகளும் அங்கு தான் இருந்தனர். இருப்பினும், நிதி சிக்கல் காரணமாக அவரது கணவர் மற்றும் மகளும் 2014ல் இந்தியா திரும்பினர். அப்போது ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததால் அவர்களால் மீண்டும் ஏமன் செல்ல முடியவில்லை.
உள்நாட்டுப் போர் உள்ளிட்ட சிக்கல்களால் நிதி நெருக்கடியைச் சந்தித்த நிமிஷா, சொந்தமாக ஒரு கிளினிக் வைக்க மஹ்தி என்பவரின் உதவியைக் கோரியுள்ளார். ஏமன் நாட்டின் சட்டப்படி அந்நாட்டுக் குடிமக்கள் மட்டுமே இதுபோல கிளினிக் வைக்க முடியும் என்பதால் அவர் மஹ்தி உதவியை நாடியுள்ளார். அதைத் தொடர்ந்து 2015ல் நிமிஷா இந்தியா வந்த நிலையில், அப்போது மஹ்தியும் உடன் வந்துள்ளார். அப்போது தனது திருமண போட்டோக்களை மஹ்தி திருடியதாகவும் நிமிஷா கூறுகிறார்.
வழக்கின் பின்னணி:
ஏமன் திரும்பிய பிறகு அந்த போட்டோக்களை மார்பிங் செய்த மஹ்தி, தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததாகக் கூறியிருக்கிறார்.
கிளினிக்கின் உரிமை ஆவணங்களையும் மோசடி செய்த அவர், மார்பிங் படங்களைக் காட்டி இருவருக்கும் திருமணம் நடந்ததால் வருமானம் மொத்தமும் தனக்கே சொந்தம் என்றும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்த மஹ்தி, சித்தரவதைச் செய்யவும் தொடங்கியுள்ளதாக நிமிஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலில் நிமிஷா உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், அப்போது மஹ்தி மீது நடவடிக்கை எடுக்காமல் நிமிஷாவை ஒரு வாரம் சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2017ல் தனது கிளினிக் அருகே உள்ள ஜெயில் வார்டனை நிமிஷா சந்தித்துள்ளார். அந்த சிறையில் தான் மஹ்தி வேறு குற்றங்களுக்காகச் சிறையில் இருந்துள்ளார்.
மஹ்திவுக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை எடுத்துக் கொள்ளுமாறு அந்த ஜெயிலர் ஐடியா கொடுத்துள்ளார். அதைக் கேட்டு மஹ்திவுக்கு பிரியா மயக்க மருந்து கொடுத்துள்ளார். இருப்பினும், அப்போது மயக்க மருந்து ஓவர்டோஸ் ஆனதில் மஹ்தி உயிரிழந்ததாக நிமிஷா பிரியா தனது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கிலேயே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை மீட்டு வரவே அவரது தாய் தனி ஆளாக ஏமன் நாட்டில் போராடி வருகிறார்.