ஒட்டு மொத்த தங்கமும் இங்க தான் இருக்கு.! டிரம்ப் முடிவால் அமெரிக்கா அதிர்ச்சி. "

அமெரிக்கா

ஒட்டு மொத்த தங்கமும் இங்க தான் இருக்கு.! டிரம்ப் முடிவால் அமெரிக்கா அதிர்ச்சி. "

அமெரிக்காவிடம் உள்ள பெரும்பாலான தங்கங்கள் ஃபோர்ட் நாக்ஸ் என்ற இடத்தில் பல தசாப்தங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

400 டன் அளவுக்கு தங்கம் இங்கே உள்ள நிலையில், சிறு வயது முதலே ஃபோர்ட் நாக்ஸ் பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். அதை நான் திறந்து பார்க்க இருக்கிறேன் என்று டிரம்ப் கூறியிருப்பது அமெரிக்காவில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவர் எடுக்கும் அதிரி புதிரி நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிர வைத்து வருகின்றன. பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் விதிக்கும் வரியால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது.

பல லட்சம் கோடி மதிப்பு

அமெரிக்கா பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை ஃபோர்ட் நாக்ஸ் எனப்படும் தங்க கருவூலத்தில் டெபாசிட் செய்து வைத்துள்ளது. இந்த கருவூலத்தில் உள்ள தங்கம் அப்படியே இருக்கிறதா என்பது தொடர்பாக விவாதங்கள் கிளம்பிய நிலையில், இவற்றை ஆய்வு செய்து உறுதி செய்யும் மிகப்பெரிய பொறுப்பை எலான் மஸ்கிற்கு டிரம்ப் வழங்கியிருக்கிறார்.

இந்த தங்க கருவூலம் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்பட்டு அங்கு இருக்கும் அனைத்து தங்கத்திற்கும் கணக்கில் கொண்டு வரப்படுவதாக கரூவூல செயலாளர் ஸ்காட் பெசண்ட் கூறியிருக்கிறார். ஆனாலும் எலான் மஸ்க் வசம் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார் டிரம்ப். கடந்த வியாழக்கிழமை குடியரசுக்கட்சியின் கவர்னர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "போர்ட் நாக்ஸ் கதவுகளை நாங்கள் திறக்க போகிறோம். போர்ட் நாக்ஸை ஆய்வு செய்ய போகிறோம்" என்றார்.

ஃபோர்ட் நாக்ஸ் எனப்படும் நாக்ஸ் கோட்டை என்பது அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தில் உள்ளது. 1,09,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது இந்த இடம். 1937 ஆம் ஆண்டில் இருந்தே இங்கு தங்கத்தை இருப்பு வைக்க தொடங்கியது அமெரிக்கா. மிகக் கடுமையான பாதுகாப்பு கொண்ட இடமாகவும் இது விளங்குகிறது. தங்கங்களை பாதுகாப்பது மட்டும் இன்றி, ராணுவ மனித வள மையமாகவும் இது உள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சம்மரில் இங்கு ராணுவ பயிற்சியும் நடைபெறுகிறது. முதல் உலகப்போர் கால கட்டத்தில் ராணுவ பயிற்சி மையமாக இது உருவாக்கப்பட்டது.

எவ்வளவு தங்கம் இங்கு இருப்பு உள்ளது?

போர்ட் நாக்ஸில் மொத்தமாக சுமார் 147.3 மில்லியன் அவுன்ஸ் தங்கம் உள்ளதாம். அமெரிக்க கருவூலத்தில் உள்ள பாதியளவு தங்கம் இந்த ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கம் ஒருபோதும் எடுக்கப்படவில்லை.. எனினும், அதன் தூய்மையை சோதிப்பதற்காக சிறிதளவு மட்டும் வழக்கமன ஆடிட் பணிகளின் போது எடுக்கப்படுகிறது. சாம்பிளுக்காக எடுப்பது போக, வேறு தங்கம் எதுவும் இங்கு இருந்து அகற்றப்படவும் இல்லை.

இங்கு வைக்கப்பட்டுள்ள தங்கம் மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது. ஏனெனில், இந்த ஃபோர்ட் நாக்சின் கட்டமைப்பு வெகு சிலருக்கே தெரியுமாம். இந்த வால்ட்டை எப்படி திறக்க வேண்டும் என்ற நடைமுறை கூட பலருக்கு தெரியாது. 16 ஆயிரம் கியூபிக் கிரானைட், 4,200 கியூபிக் யார்டு கான் கிரிட் கொண்டு இந்த போர்ட் நாக்ஸ் 1936 ல் கட்டப்பட்டுள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை பார்வையிட கடந்த 1974 அம் ஆண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் சில நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தங்கம் அகற்றப்பட்டதாக வதந்திகள் வெளியான போது கருவூல செயலர் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அதிகாரப்பூர்வ நபரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. ஒரே ஒரு முறை அமெரிக்க அதிபர் பிரான்கிளின் டி ரூஸ்வெல்ட் சென்று பார்த்து இருக்கிறார்.