உக்ரைனுக்காக 120 போர் விமானங்கள்.! ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில். !

உலகம்

உக்ரைனுக்காக 120 போர் விமானங்கள்.! ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில். !

லண்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்துவதாக அறிவித்துள்ளதால் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கோரியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ள சூழலில் முதற்கட்டமாக 120 விமானங்கள் தயாராகி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே போர் வெடிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

3 ஆண்டுகளாக தொடரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார். இதுதொடர்பாக ரஷ்யா, உக்ரைனிடம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது தரப்பு அதிகாரிகள் பேசி வருகின்றனர். இருப்பினும் இருநாடுகளும் பிடி கொடுக்கவில்லை. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது தொடர்ந்து வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசியிலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தும் டொனால்ட் டிரம்ப் பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு இப்போது வரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

குறிப்பாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி - டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை என்பது உக்ரைன் - அமெரிக்கா இடையேயான மோதலாக மாறியது. ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில்

இருந்து வெளியே அனுப்பினார் டிரம்ப். இந்த கோபத்தால் உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது ரஷ்யாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் ரஷ்யாவும் தற்போது வரை போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அமெரிக்காவின் உதவியின்றி உக்ரைனால் போரை திறம்பட சமாளிக்க முடியாது என்பதால் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தும் முடிவில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக தலையீடு செய்தும் கூட போர் நிறுத்தத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

அதேவேளையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் போரை எதிர்கொள்ள தயாராக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உதவி செய்து வரும் அமெரிக்கா இப்போது கைவிரித்த நிலையில் அவர் ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கோரியுள்ளார். அதன்படி ஐரோப்பிய நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன. முதற்கட்டமாக பிரிட்டன் ரூ.24, 841 கோடியை ஆயுதம் தயாரிக்க உக்ரைனுக்கு கடனாக வழங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி எத்தகைய பிரச்சனை வந்தாலும் உக்ரைன் பக்கம் இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன. இதற்கிடையே தான் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து வீரர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உறுப்பினர்களாக உள்ளன. இதனால் நேட்டோவில் படையில் உள்ள வீரர்கள் சிறந்த போர் பயிற்சியுடன் உள்ளன. எனவே ஐரோப்பிய நாடுகளின் வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போது இந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது ஐரோப்பிய யூனியன். மாறாக வீரர்களுக்கு பதில் 120 போர் விமானங்களை உக்ரைன் பாதுகாப்பு பணிக்கு தயாராக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 'ஆபரேஷன் ஸ்கை ஷீல்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் நோக்கம் என்பது உக்ரைனின் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பது தான்.

அதாவது ஐரோப்பிய யூனியனின் வான்வெளியில் இந்த விமானங்களை பறக்கவிட்டு உக்ரைனின் மேற்குப்பகுதியில் கட்டங்களை நோக்கி ஏவப்படும் குரூஸ் வகை ஏவுகணைகளை அடையாளம் கண்டு உக்ரைன் விமானப்படையின் உதவியுடன் வானிலேயே அழிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் ஐரோப்பிய யூனியன் சார்பில் ராணுவ வீரர்களை அனுப்பினால் அது மிகப்பெரிய மோதலாக மாறலாம். இதனை இப்போதைக்கு தவிர்த்து உக்ரைனுக்கு போர் விமானங்கள் மூலம் உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதனை கேள்விப்பட்ட ரஷ்யா, ஐரோப்பிய

நாடுகளுக்கு கடும் வார்னிங்கை கொடத்துள்ளது. இதுபற்றி ரஷ்யா சார்பில், ''உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பினால் ரஷ்யா நேரடியாக ஐரோப்பிய நாடுகளை தாக்கும்'' என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் தற்போது ரஷ்யா - ஐரோப்பா நாடுகள் இடையே பெரும் பதற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.

தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய யூனியன் என்பது மிகப்பெரிய அமைப்பாகும். இந்த அமைப்பில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அப்படி பார்த்தால் ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 27 நாடுகள் உள்ளன. பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக்குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அதேபோல் ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுக்கல், ரோமானியா, ஸ்லோவாகியா, ஸ்லோவெனியா, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய யூனியனில் உள்ளது. இந்த நாடுகள் சார்பில் தான் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு 120 போர் விமானங்கள் தயாராக உள்ளன. இருப்பினும் இந்த விமானங்கள் எப்போது உக்ரைனுக்கான பணியை தொடங்குகின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.