அதிமுக - பாஜக கூட்டணி 110 முதல் 120 வரை தொகுதிகள் வெல்வோம்.! விருந்தளிப்பில் எடப்பாடி கே.பழனிச்சாமி திட்ட வட்டம்.!
தமிழகம்

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் முடிவை எடப்பாடி தன்னிச்சையாக எடுத்ததாக அவர் மீதும், பாஜகவுடன் கூட்டணி முடிவு தவறானது என்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மா.செ.க்களும் அதிருப்தியில் இருந்தனர்.
இதனையறிந்த எடப்பாடி, எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியை போக்கும் விதத்திலும், பாஜகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்பதை விளக்குவதாகவும் எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று விருந்து வைத்தார் எடப்பாடி. இதில், செங்கோட்டையன், பவானிசாகர் எம்.எல்.ஏ. பன்னாரி, சூலுர் எம்.எல்.ஏ. கந்தசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜுனன் ஆகிய நான்கு பேர் கலந்து கொள்ளவில்லை.
விருந்தை செங்கோட்டையன் மட்டுமே புறக்கணித்துள்ளார். மற்ற மூவரும் கலந்து கொள்ள இயலாத சூழலை எடப்பாடியிடம் விவரித்து விட்டார்களாம். விருந்து நிகழ்வில் பேசிய எடப்பாடி, "உங்களிடம் கலந்தாலோசிக்காமல் பாஜக கூட்டணியை முடிவு செய்துவிட்டேன் என்பதில் உங்களுக்கு கோபமா ? அல்லது பாஜக கூட்டணியே தேவையில்லை என்பதால் அதிருப்தியா? என்று எனக்குப் புரியவில்லை.
தவறான அதிகாரம் இல்லை
எதுவாக இருந்தாலும் பதில் ஒன்று தான். கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தமாட்டேங்கிறது உங்களுக்குத் தெரியும் அந்த நம்பிக்கையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நானும் சீனியர்களும் சேர்ந்து எடுத்த முடிவு தான்.
நம்மைப் பொறுத்தவரை, 2026 தேர்தல் வாழ்வா? சாவா போராட்டம். திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை கூட்டணியின் பலத்தில் நிற்கிறது. ஒரு கட்சி திமிறினால் கூட ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடும். திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகவுக்குத்தான் இருக்கிறதுன்னு மக்கள் நினைக்கிறார்கள்.
கூட்டணி தேவை
ஆனால், நமக்கும் கூட்டணி தேவைப்படுகிறது. இந்த சூழலில்தான், வெவ்வேறு ஏஜென்சிகள் என 2 தனியார் நிறுவனங்கள் மூலம் 2 சர்வேக்கள் தனித்தனியாக எடுத்துப் பார்த்தோம். தனித்தனியாக என்றாலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட சர்வே அது. தனியாக போட்டியிட்டால் ரிசல்ட் எப்படி இருக்கும் ? பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எப்படி இருக்கும்? என்பதுதான் சர்வேயின் நோக்கம். அ
அதன்படி பார்த்தால், தனித்து அதிமுக போட்டியிட்டால் 80 முதல் 90 சீட் வரை கிடைக்கிறது. அதுவே பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 110 -120 வரை கிடைக்கிறது. நாம் சில வியூகங்களையும் நேர்மையாக உழைப்பையும் போட்டால் நம் கூட்டணி திமுகவை 70 சீட்டுகளில் முடக்கி விட முடியும். இதே போல, மத்திய அரசின் உளவுத்துறையும் இதே போல ஒரு சர்வேயை எடுத்துள்ளது.
மத்திய அரசு உளவுத்துறை சர்வே
அதிலும் ஏறத்தாழ இதேபோல ரிசல்ட்டே வந்திருக்கிறது. குருமூர்த்தி வீட்டில் அமித் சாவை நான் சந்தித்தபோது அந்த சர்வே என்னிடம் காட்டப்பட்டது. அதனால் இதையெல்லாம் சீர் தூக்கிப்பார்த்துத்தான் கூட்டணி ஓ.கே. சொன்னேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்கவில்லை. அதே போல தன்னிச்சையாகவும் முடிவெடுக்கவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்றுதான் முடிவெடுத்தேன் " என்று விளக்கமாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி.
கூட்டணி ஆட்சி
அப்போது சில எம்.எல்.ஏ.க்கள், " கூட்டணி ஆட்சிக்கு நீங்கள் ஒப்புக் கொண்டதாகவும், அதை இப்போதே சொன்னால் கட்சியில் குழப்பம் வரும். அதனால் அதை ரகசியமாக வெச்சிருக்கீங்க " என்று சொல்லப்படுவதாக சிலர் சொல்ல, "நிச்சயம் நம்புங்கள். அப்படி எந்த உடன்பாடும் கிடையாது. அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் ஏற்படுத்திக்கொண்டிருப்பது வெறும் தேர்தல் கூட்டணி தான். கூட்டணி ஆட்சி இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி .