பாடலின் அரசி எஸ்.ஜானகி

பாடலின் அரசி எஸ்.ஜானகி

சிங்கார வேலனே தேவா நாதஸ்வரத்துடன் பாடிய தருணம் -பாடகி எஸ்.ஜானகி

வீட்டில் ஏழாவதாகப் பிறந்த பெண் குழந்தை ஜானகி. பிறந்தது ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்டிலா என்ற கிராமத்தில். 

ஜானகியின் தந்தை பள்ளி ஆசிரியர் மற்றும் ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றியவர்.

வீடு முழுவதும் குழந்தைகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கக் கூடிய குடும்ப பின்னணி கொண்டவர்.

ஆனால் ஜானகி மட்டும் பள்ளிக்குப் போக விருப்பமில்லாதவர். சிறு வயதிலேயே குரலில் குறுகுறுப்பு.காதில் விழுந்ததைக் கிரகித்து பிரதி எடுத்த மாதிரி பாடுவது பழக்கமாகி விட்டது.பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் போய் பாடும் குழந்தையாக இருந்தார் ஜானகி.

சர்க்கஸ் குழு அந்த ஊருக்கு வந்தபோது சர்க்கஸை பார்க்க சென்ற ஜானகிக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அதே மாதிரி கயிற்றில் ஏறி, ‘பேலன்ஸ்’ பண்ணி நடக்க முயற்சிகள், அந்தரத்தில் பல்டி, உடலை பின்னால் வளைத்து காசு எடுப்பது.கூடவே பரத நாட்டியம் ஆடவும் முனைந்திருக்கிறார் சிறு வயதிலேயே.

எல்லாவற்றிலும் ஏதோ ஒரு துடிப்புடைய ஜானகி தனது அக்கா சங்கீதம் கற்றுக் கொள்ளப் போகிறபோது கூடவே போய்வரும் பழக்கமுடையவர். அப்போது ஜானகியின் குரலைக் கேட்டு விட்டு வித்வான் பைடி சுவாமி சொன்னார்.

“உனக்கு நல்லா பாட வரும் குழந்தே… நேரே ‘நகுமோ’விலிருந்து உனக்கு ஆரம்பிச்சுடலாம்…” எனக் கூறி பாடம் எடுத்துள்ளார்.கொஞ்ச காலம் கற்றுக்கொண்டு பின்னர் ராஜமுந்திரியில் இருந்த ‘கிராந்தி கலா மண்டலி’ குழுவில் சேர்த்து விட்டார் ஜானகி.

ராயல சீமா பஞ்சத்திற்குப் பாடிச் சேகரித்து நிதி அனுப்பினாா்கள். வீட்டிற்கு வந்ததும் அம்மா, கர்நாடக இசை பாடச் சொல்வார். ஆனால் அதன்மீது கவனம் திரும்பவில்லை. ஆனால் அம்மா, அப்பா பாடும் கீர்த்தனைகள் மனதில் பதிந்துவிட்டன. இதெல்லாமே நடந்தது ஜானகியின் 12 வயதிற்குள்ளாம்.

“எங்களுடைய மாமா சந்திரசேகர் நிறைய கலை நிகழ்ச்சிகள் நடத்துவார். சின்னச் சின்ன நாடகங்கள் போடுவார். நிகழ்ச்சிகளுக்கு இடையில் என்னைக் கூப்பிட்டு ஒரு பாட்டு பாடச் சொல்வார். லதா மங்கேஷ்கரின் இந்திப் பாடல்களை விரும்பிப் பாடுவேன். உச்சரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவேன்.

சின்ன வயதிலிருந்தே மேடைக் கூச்சம் கிடையாது. பாவாடை தாவணி, இரட்டை சடையுடன் ஒரு கல்லூரியில் பாடப் போனேன்.

என் தோற்றத்தைப் பார்த்ததும் கத்தி விட்டார்கள். அவ்வளவு ஒல்லியாக இருப்பேன். பயங்கர கூச்சல், கலாட்டா. ஆனால் நான் எதையும் பொருட்படுத்த வில்லை. ‘நாகின்’ படத்தில் வரும் “ஆஜா " என்கிற இந்திப் பாடலை இழுவையாக பாட ஆரம்பித்ததும் அசந்து விட்டார்கள்.

ஹார்மோனியத்தில் கடைசிக் கட்டையையும் தாண்டி, அழுத்தமான குரலில் பாடுவேன். ஹிந்துஸ்தானி பாட்டானாலும் கிளாசிக்குகள், நாட்டுப்புற பாடல்கள் எதுவானாலும் அப்படியேப் பாடுவேன்.

கண்டசாலா பாடல்களும் பிடிக்கும். சினிமாக்களுக்கு போய்விட்டு வந்ததும், அதில் இருக்கும் பாட்டும், இசையும், அதைப்பாடிய முறையும் மனதில் பதிந்து விடும்.

பதினெட்டு வயதில் திருப்பதியில் கல்யாணம். என் கணவருக்கு என்னுடைய பாட்டில் ரொம்பவும் ஈடுபாடு. “இது பிரபலமாகி வெளியே தெரிய வேண்டிய குரல்” என்று பாராட்டுவார். என்னுடைய மாமனாரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என விவரித்த ஜானகி

மேலும் சென்னையிலிருந்த ஏவி.எம்., ஜெமினி ஸ்டூடியோக்களுக்கு கடிதங்கள் எழுதினர் கணவரின் குடும்பத்தார்.

“எங்களுடைய பெண் ரொம்ப நன்றாகப் பாடுவாள். உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள் அழைத்தால் வருகிறோம்” இவ்வளவுதான் அந்த கடிதத்தில் இருந்த விஷயம்.

பி.சுசிலா, எம்.எஸ்.ராஜேஸ்வரி போன்றவர்கள் ஏவி.எம்-மில் ஸ்டுடியோக் கலைஞர்களாக இருந்து வெளியே வந்தநேரம் அது.

அங்கிருந்து ஆடிசனுக்கு வரச்சொல்லி கடிதம் வந்து விட்டது. உடனே ஒரு வேனில் சென்னைக்கு வந்தோம்.

பாடச் சொன்னார்கள். லதாவின் பாடல்கள் சிலவற்றைப் பாடினேன். ரெக்கார்டிங் தியேட்டருக்கு வெளியே என் குரலை கேட்டு கூட்டம் கூடிவிட்டது. உடனே என்னைத் தேர்ந்தெடுத்தார் சுதர்சன மாஸ்டர். மாத சம்பளம் 300 ரூபாய்.வெளியே அதற்குள் என்னைப் பற்றி தெரிய ஆரம்பித்து விட்டது.

சலபதி ராவின் இசையில் “பேதை என் ஆசை பாழானதேன்” என்று துவங்கி “ஓ…” என்று அழக்கூடிய பாட்டை முதலில் பாடினேன். படத்தின் பெயர் ‘விதியின் விளையாட்டு’. ஆனால் பாடல் வெளிவரவில்லை.பாடின தேதி மட்டும் நினைவில் இருக்கிறது. 1957 ஏப்ரல் 4 ம் தேதி.

கண்டசாலாவுடன் ‘எம்.எல்.ஏ.’ என்கிற தெலுங்குப் படத்தில் பாடினேன். அதுவும் சோகப்பாட்டு. மலையாளத்திலும் இதேமாதிரி “இருள் மூடுகையோ என் வாழ்வில்” என்று அழுதுகொண்டே பாடுகிற பாட்டு.

இதே மாதிரிப் பல பாடல்கள் பாடினபிறகு சிங்களத்தில் ஐந்து பாடல்கள் பாடினேன். அவ்வளவும் சோகம். சினிமா உலகில் என் பிறப்பும் அழுகையுடனே ஆரம்பித்தது.

ஆனால் மனம் எந்த விதத்திலும் தளரவில்லை. “எப்படியாவது கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடாமல் தொடர்ந்துப் பாட வேண்டும்.

அப்போது ஒரு வார்த்தைக்கூட தமிழில் வாசிக்கத் தெரியாது. தெலுங்கில் எழுதி வைத்துப் பாடுவேன். மலையாளமும் அப்படித்தான். பிறகு சென்னை ராயப்பேட்டையில், ஜானகி என்கிற ஆசிரியரிடம் தமிழை வேகமாக கற்றுக் கொண்டேன். விரைவில் தமிழ் படிக்க ஆரம்பித்து விட்டேன்.

நான் படித்தது தமிழ் ஒன்றுதான். மற்றபடி எந்தப் பள்ளிக் கூடத்திற்கும் போனதில்லை. பிறகு ஹிந்தி படிப்படியாகக் கற்றுக் கொண்டேன். கன்னடம் படிக்க வரும். எழுத வராது. மொழி எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் நன்கு தெரிந்துகொண்டு பாடலின் அர்த்தமும், உணர்ச்சியும் சிதையாமல் பாடுவதில் எப்போதும் கவனம் எடுத்துக் கொள்வேன்.

17 மொழிகளில் பாடி இருக்கிறேன். உச்சரிப்பில் அந்த மொழி சார்ந்த உணர்வு இருக்க வேண்டும். குரலில் பாவமும், ஏற்ற இறக்கமும் ரொம்ப முக்கியம். ஒவ்வொரு மொழியில் பாடும்போதும் இந்த எச்சரிக்கை எப்போது என் மனதில் இருக்கும்.

“அன்பாலே தேடிய என்..” என்ற ‘தெய்வப் பிறவி’ படத்தில் சி.எஸ்.ஜெயராமனுடன் ஹம்மிங் பாடினேன். அது பிரபலமானது. தொடர்ந்து பல பாடல்கள்.

“தென்னங்கீற்று…” என்று துவங்கும் ‘பாதை தெரியுது பார்’ பாட்டும், ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ என்கிற பாட்டும் அப்போது ரொம்ப பிரபலம்.

ஏவி.எம் நிறுவனத்தில் காண்ட்ராக்டிலிருந்து ஒரு வருஷத்திற்குள் வந்து விட்டேன். 1959-ன் இறுதியில் ‘கொஞ்சம் சலங்கை’ படத்தை ஒரு வருஷம் எடுத்தார்கள்.

அந்தப் படத்தில் முதலில் என்னை அதற்குப் பாட வைப்பதாக இல்லை. வேறு சிலரை பாட வைக்க முயன்றார் இசையமைப்பாளர் எம்.எஸ்.சுப்பையா நாயுடு பம்பாய் வரை போய்ச் சிலரை பாட வைக்க முயன்றார்கள்.

“நாதஸ்வரத்தின் உயர்ந்த பிட்சுக்கு பாட வேண்டும் என்றால் ஜானகியால் தான் பாட முடியும்” என்று சொல்லி பெருந்தன்மையுடன் அனுப்பியவர் பி.லீலா. ரிகர்சலுக்குக் கூப்பிட்டார்கள். இரண்டு நாட்கள் ரிகர்சல். ஸ்வரங்கள் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

காரு குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்தைத் தனி டிராக்கில் ரெக்கார்ட் பண்ணி இருந்தார்கள். நான் தனியாக டிராக் பாடினேன். அருணாச்சலம் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் பண்ணினார்கள். முழுமையாக விடாமல் பாடினேன். அந்தப் பாடல் ரொம்ப பிரபலமாகி விட்டது. அதனுடைய விளைவோ என்னவோ, தமிழில் எனக்கு கொஞ்ச காலத்திற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் தொடர்ந்துப் பாடினேன். எப்போதாவது தமிழில் பாட வாய்ப்பு வரும். ‘ஆலயமணி’, ‘சுமைதாங்கி’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘பாத காணிக்கை’ படங்களில் பாடினேன்.

‘நம்ம குழந்தை’ படத்தில் பாடின “ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்” பாடலுக்காக முதல் அரசாங்க விருது கிடைத்தது. “சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா” போன்ற பல பாடல்கள் பிரபலமாயின. இருந்தாலும் எதனாலோ நீண்ட இடைவெளி தமிழ் திரையுலகில்.

இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் அப்போது உதவியாளராக இருந்தவர் இளையராஜா. அப்போது அவருடன் பழக்கம். கன்னட ராஜ்குமாரும், நானும் சேர்ந்து பாடின பாடல்கள் ரெக்கார்டிங் ஆன போது அவரும் இருந்திருக்கிறார்.

அவருடைய மனசில் இருந்த இசைக்கு என் குரல் பொருந்தும் என்று அவருக்குத் தோன்றி இருக்கலாம். ‘அன்னக்கிளி’ பட வாய்ப்பு வந்ததுமே ஜானகி தான் இதற்கு பாட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் ராஜா. அதில் முதலில் எட்டு பாடல்கள் பாட வேண்டும் என்று சொன்னார்கள். கடைசியில் 3 பாடல் பாடினேன்.

“மச்சானைப் பார்த்தீர்களா” பாட்டு வந்து எக்கச்சக்க பிரபலம். அதைத் தொடர்ந்து மறுபடியும் தமிழில் நிறைய வாய்ப்புகளை இளையராஜா தொடர்ந்து கொடுத்தார்.

அவருடைய இசையமைப்பில் வித விதமாகப் பாடினதைச் சொல்வதற்கே வார்த்தை இல்லை. அவ்வளவு நல்ல அனுபவம். கிழவிக் குரல், குழந்தைக் குரல், குண்டான பெண்ணின் குரல் என்று பல விதமான குரல்களில் என்னைப் பாட வைத்திருக்கிறார்.

தெலுங்கு, மலையாளத்தில் அவர் இசையமைத்த படங்களிலும் வாய்ப்புகள் வந்தன. திரும்பவும் 90-க்கு பிறகு இடைவெளி. எல்லோரும் என்னை மறந்து விட்டார்களா என்று தோன்றிய நேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து அழைப்பு.

“ஒட்டகத்தைக் கட்டிக்கோ” பாடல் போன்றவற்றைப் பாடினாலும் “நெஞ்சினிலே நெஞ்சினிலே” என்று அவர் இசையமைப்பில் பாடின பாட்டு மறுபடியும் பிரபலமானது. “மார்கழி திங்கள் அல்லவா” பாட்டுக்கு அரசின் விருது கிடைத்தது. ரஹ்மானின் இசையில் ஹிந்தியிலும் பாடியிருக்கிறேன்.

துவக்கக் காலத்திலிருந்தே யாரையும் தேடிப்போய் வாய்ப்புக் கேட்டதில்லை. பாடுவதில் கவனமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால், வாய்ப்புகள் தானாகவே தேடி வரும் என்கிற உணர்வு எனக்கு உண்டு. அதில் சரியாகவே இருப்பேன்.

எந்த இசையமைப்பாளராக இருந்தாலும், அவர்களுடைய கற்பனையில் இருக்கிற பாட்டை நாம் கெடுத்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் கொண்டவர் ஜானகி.

கன்னடத்தில் ‘ஹேமாவதி’ படத்தில் N.வைத்தியநாதனின் இசையில் ஆபோகி, தோடி என்று இரண்டு ராகங்கள் இணைந்தப் பாட்டு.

அந்தப் பாட்டும், ஸ்வரமும் அவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் மனதில் தியாகராஜ சுவாமியை வேண்டிக் கொண்டுப் பாடினேன். அவ்வளவு அற்புதமாக அமைந்தது அந்தப் பாட்டு. இந்த மாதிரியான சில பாட்டுக்கள் ஒரு சவால்தான்.

பம்பாயில் ஒரு முறை இசை நிகழ்ச்சிக்குப் பாடப் போனோம் நானும், பி.பி.ஸ்ரீனிவாசும்.

அங்கே மறுநாள் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர கச்சேரி. அங்கேதான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன்.

“சிங்கார வேலனே” பாட்டில் வரும் வசனங்களைப் போல நிஜமாகவே நேரில் பரிமாறிக் கொண்டோம். நான் அவர் வாசித்த நாதஸ்வர இசையும், அவர் திருப்பி எனது குரலையும் மாற்றி மாற்றிப் புகழ் பாடியது எனக்கு கூச்சமாகிப் போய்விட்டது என்கிறார் ஜானகி.

நிறைய பாடகர்களுடன் சேர்ந்து பாடும்போது, நன்றாகப் பாடினால் பாராட்டுவார்கள். கோரஸ் பாடுகிறவர்களையும் உற்சாகப்படுத்துவோம். ஒரு குடும்பச் சூழ்நிலை அப்போது இருந்தது.

நாற்பத்தி நான்கு வருஷங்களாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். பலதரப்பட்ட இசை அமைப்பாளர்களுடன் பாடியிருக்கிறேன். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவிலிருந்து பலர் ரிகர்சலின்போது நாம் அந்தப் பாட்டை கூடுதலாக ‘இம்ப்ரூவ்’ பண்ணிக் கொஞ்சம் சங்கதி சேர்த்துப் பாடினால், அனுபவித்து ரசித்து பாராட்டுவார்கள்.

எத்தனையோ அருமையான பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதில் எனக்கு ஒரு மனநிறைவு. நம்முடைய வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறோம் என்கிற திருப்தி மட்டும் தான்.

எப்போதும் மனதிற்குள் என்னைப் பற்றிய தன்னம்பிக்கை நிறைய உண்டு. பள்ளிக் கூடத்திற்குப் போய் படிக்காத என்னை இவ்வளவு மொழிகளில் பாட வைத்ததற்குக் காரணம் அந்த உணர்வுதான்.

நாம் நம் திறமை மீது வைத்திருக்கிற இந்த மாதிரியான நம்பிக்கையைவிட, வேறு சிபாரிசு வேண்டியதில்லை. எந்தப் பாட்டையும் எவ்வளவு தரமாகப் பாடுகிறோம் என்பது ரொம்பவும் முக்கியம்.

நான்கு தடவை தேசிய விருதுகள், கேரள அரசின் விருதுகள் 13 தடவை, தமிழக அரசின் விருது, சினிமா ரசிகர் சங்க விருதுகள் என்று பலமுறை கிடைத்திருக்கிறது.

கன்னடத்தில் நிறைய பாடியும் அந்த மாநில கலைஞர்களுக்குதான் விருது கொடுப்பது என்பதில் அங்கு உறுதியாக இருக்கிறார்கள். நான் அதற்காகப் போராடி இருக்கிறேன்.

கன்னடத்தில் எவ்வளவு பாடிச் சேவைப் பண்ணியிருக்கிறோம். அதை ஏன் நீங்கள் கவுரவப்படுத்தக் கூடாது என்று போராடின பிறகு பாடுகிறவர்களுக்கும் இப்போது விருதுகள் கொடுக்கிறார்கள் கர்நாடகத்தில்.

என்னுடைய துவக்கக் காலத்தில் ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு எழுதிய கடிதம்தான் என்னை சென்னைக்கு வரவழைத்தது. பாடகியாக்கியது.

“அப்போது அந்த மாதிரி சூழ்நிலை இருந்தது. இப்போதும் எவ்வளவோ திறமையுள்ளவர்கள் இருக்கிறார்கள். வாய்ப்புகளுக்கு முட்டி மோதுகிறார்கள்.

ஆனாலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. சோர்ந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்ப முயற்சி பண்ண வேண்டும். நம்முடைய திறமையை நாமே குறைத்து மதிப்பிடக் கூடாது. தகுதியுள்ள திறைமைக்கு உரிய இடம் கிடைத்தே தீரும்.”

உற்சாகமும் குதூகலமும் நிரம்பிய குரலுடன் சிரித்த முகத்துடன் சொல்கிற எஸ்.ஜானகி இடையிடையே அவரது பாடல்களையும் பாடிக் காட்டுகிறார்.

பேசிக் கொண்டிருந்து விட்டுச் சட்டென்று டிராக் மாறின மாதிரி உச்சிக்குப் போய் பாவத்துடன் பாடுகிறார்.

இன்னும் அவரது குரலுக்கு வயது ஆகவில்லை.

- மணா

மணாவின் ‘கனவின் பாதை’ நூலிலிருந்து