கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுறாங்க..எனக்கு வேலையே வேண்டாம்! டிஎஸ்பியும் உடந்தை. காவலர் பரபர கடிதம்!
தென்காசி

தென்காசி: தென்காசியில் மணல் கொள்ளையர்களை பிடித்த தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் தனது வேலையை ராஜினாமா செய்வதாக காவலர் ஒருவர் பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
மேலும் மணல் கடத்தல் கும்பலுக்கு டிஎஸ்பியும் உடந்தையாக இருப்பதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முறையான ஆவணங்கள் இன்றி மணல் கடத்தி வந்த வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அந்த வாகனத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார். தொடர்ந்து இதே போல இரண்டு, மூன்று வாகனங்களை அவர் பறிமுதல் செய்த நிலையில் மூன்று நபர்கள் காவலரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது உயர் காவல் அதிகாரிகளும் கொலை கும்பலுக்கு உடந்தையாக இருப்பதால் தன்னைப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார். தற்போது அந்த கடிதம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில்,"நான் சிவகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறேன். நான் 18.12.2024ம் தேதி டே பீட் அலுவலாக சிவகிரி காவல்நிலைய எல்கையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தேன்.
அப்போது சிவகிரி நீதிமன்றத்தின் அருகே மெயின் ரோட்டில் வைத்து 14.15 மணியளவில் எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் ஒரு கம்ப்யூட்டர் பில்லை மட்டும் வைத்துக்கொண்டு அரசு அனுமதியின்றி TN 55 AP 5356 Tractor 1 யுனிட் கெப்பாசிட்டி கொண்ட வாகனத்தில் எம்சாண்ட் மணலினை முறைகேடாக கடத்திவந்த நபரினை காவல்நிலையம் அழைத்து வந்து நிலைய பாராவிடம் ஒப்படைத்துவிட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கூற சொல்லிவிட்டு பின்னர் இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று சிவகிரி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சொக்கநாதம்புத்தூர் விளக்கில் பிள்ளையார் கோவில் அருகில் வைத்து எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் ஒரு கம்ப்யூட்டர் பில்லை மட்டும் வைத்துக் கொண்டு TN 84 P 8007 Tractor வாகனத்தில் ஜல்லி கல்லினை ஏற்றி வந்த நபரின் வாகனத்தினையும் அதனுடன் வந்த 2 மாட்டுவண்டிகள் நிறைய ஆற்றுமணலை திருடி கொண்டுவந்த 2 நபர்கள் என மொத்தம் 3 நபர்களையும் 3 வாகனங்களையும் கைப்பற்றி நிலையம் கொண்டு வருவதற்காக காவல் நிலையத்திற்கு 18.12.24 ம் தேதி மதியம் 03.10 மணிக்கும் 03.16 மற்றும் 03.24 மணிக்கும் தகவல் கூறி உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க சொல்லியும் பின்னர் அன்று நான் பிக் அவர்ஸ் பணியில் இருந்த முதல்நிலை காவலர் திரு.ராஜேஸ் கண்ணா அவர்களுக்கும் 03.21 மணிக்கு தகவல் தெரிவித்த போது உதவி ஆய்வாளர் திரு.வரதராஜன் அவர்கள் வேறு அலுவலாக தன்னை நியமித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் தனிப்பிரிவு முதல்நிலைக்காவலர் திரு.மகேந்திரன் என்பவருக்கு 03.26 03.43 மற்றும் 03.50 ஆகிய நேரங்களில் தகவல் தெரிவித்த பின்னர் உதவி ஆய்வாளர் திரு.வரதராஜன் மற்றும் தனிப்பிரிவு முதல்நிலைக்காவலர் திரு.மகேந்திரன் ஆகியோர் உதவியுடன் கைப்பற்றிய 3 நபர்களையும் 3 வாகனங்களையும் காவல் நிலையம் கொண்டுவர வேண்டி சொக்கநாதன்புத்தூர் விலக்கிலிருந்து சிவகிரிக்கு AKR என்ற கல்குவாரி வழியாக அழைத்து சென்று கொண்டிருந்தபோது விக்னேஷ் பிஎல்ஆர் மற்றும் தாஸ் என்ற 3 நபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வழிமறித்து தடுத்து நிறுத்தி காவல் பணியை செய்ய விடாமல் தடுத்து இது என்ன ஏரியா தெரியுமா, நீங்க யாரு எந்த ஊரு என்று எல்லாமே எங்களுக்கு தெரியும் வேற மாதிரி ஆயிடும் என கையை நீட்டி ஒருமையில் அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி மேற்படி வாகனங்களையும் கைப்பற்றி அபகறித்து கொண்டு போக சொல்லிவிட்டனர்.
மேலும் அங்கிருந்த ஒருநபர் இப்போதுதான் ஸ்டேசன்ல ஒரு வண்டிய எடுத்துட்டு வந்தேன் திரும்பவும் எங்க ஏரியா வண்டிய பிடிச்சா வேறமாதிரி ஆயிடும் என தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. உதவி ஆய்வாளரும் தனிப்பிரிவு காவலரும் இருக்கும் போதே வாகனங்களை அத்துமிறி எடுத்துச்சென்று விட்டனர். அதன்பின் நிலையம் வந்து பாரா தலைமைக்காவலர் திரு.சுந்தர்ராஜ் என்பவரிடம் கேட்ட போது TN 55 AP 5356 Tractor வாகனத்தினை எடுத்துச்சென்றுவிட்டதாகவும் வேறு பாஸ் கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததை தெரிந்து நான் மிகுந்த அச்சத்துக்குள்ளானேன். இது தொடர்பாக வாகன ஓட்டுநர்கள் பாஸ் இல்லாமல் தான் வாகனம் இயக்குவதாக பேசிய தெளிவான வீடியோ ஆதாரமும் மேலும் பணியில் இருந்த என்னை பணிசெய்ய விடாமல் எனது பணியினை தடுத்து எனக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர்களின் வீடியோ ஆதாரங்களும் என்னிடத்தில் உள்ளது.
மேலும் AKR கல்குவாரியில் முறைகேடாக கொடுக்கப்பட்ட கணினி பில்களும் தங்கள் வசம் ஒப்படைக்கிறேன். மேற்படி சம்பவத்தால் எனக்கு காவல் பணி புரிய மிகவும் அச்சமாக உள்ளது. காவலர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இன்றி மணல் கடத்தும் மாபியாக்களின் பிடியில் உள்ள சிவகிரியில் தொடர்ந்து வேலை செய்யவும், இதுபோல பல அரசுக்கு எதிராக நடக்கும் அனைத்து சம்பவத்திற்கும் உடந்தையாக நின்று வழிகாட்டியாக இருக்கும் உயரதிகாரிகளை கண்டு எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது.
மேற்படி சம்பவமானது காவல் ஆய்வாளர் காவல் துணை கண்காணிப்பாளரின் பார்வைக்கு உதவி ஆய்வாளரால் தெரிவிக்கப்பட்ட பட்சத்திலும் என்னிடம் இது சம்மந்தமாக எந்த விளக்கமோ நம்பிக்கையோ கொடுக்காததும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் என்னை ஆல்பா பணிக்கு சம்பவம் நடந்த மறுநாளே 19.12.24 ம் தேதி மாற்றியது குற்றவாளிகளை காக்க வேண்டியும் தவறை மறைக்கும் நோக்கோடு அதிகாரிகள் செயல்படுவதும் எனக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுக்கிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக 18.12.2024 தேதி காவல்நிலையத்தில் காவல்துறை தலைமை இயக்குநருக்கு புகார்மனு அளித்து அம்மனு பொதுநாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. ஆனால் அந்த மனுவினை காவல்துறை இயக்குநருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்து குற்றவாளிகளை பாதுகாத்தும் குற்றத்திற்கு உடந்தையாகவும் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே 10.12.24ம் தேதி உதவி ஆய்வாளர் உத்தரவுப்படி இராயகிரி பகுதியில் குட்கா விற்பனை செய்த மாதவன் என்பவரின் கடைக்கு சீல் வைக்க வேண்டி சென்றிருந்த போது கடை எதிரே TN79 F 2508 என்ற வாகனத்தில் ஜல்லி ஏற்றி வந்த வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தை நிறுத்தி பாஸ் கேட்ட போது பாஸ் இல்லாமல் வெறும் AKR கல்குவாரியில் கொடுத்த பில்லினை மட்டும் வைத்துக்கொண்டு அரசு அனுமதியின்றி வாகனத்தை கனிம வள திருட்டில் ஈடுபட்டதை காவல் உதவி ஆய்வாளருக்கும் அவருடன் அன்று உடனிருந்த தனிப்பிரிவு முதல்நிலைக்காவலருக்கும் தகவல் அளித்த போது மேற்படி வாகனங்கள் புளியங்குடி டிஎஸ்பி கன்ட்ரோலில் வாகனம் இயங்குவதாக தெரிவித்தனர். ஆதற்கான ஆடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
பெருமைமிகு காவல் பணியில் களங்கம் விளைவிக்கும் விதமாக அனைத்து அதிகாரிகளும் இலட்சக்கணக்கில் பணத்தை வாரி குவித்துக்கொண்டு காவலர்களை ரோல்காலில் சோற்றை திங்குறியா வேற ஏதையும் திங்குறியா என சிவகிரி காவல் ஆய்வாளர் காவலர்களை கேட்பதும் உதவி ஆய்வாளர் திரு.வரதராஜன் அவர்கள் உயிரை துச்சமாக நினைத்து பிடித்த கஞ்சா வாகனத்தை நீதிமன்றத்தில் காட்டாமல் உடனே கொடுக்க சொல்லி மிரட்டி கஞ்சா குற்றவாளிகளுக்கும் உடந்தையாக நிற்கும் புளியங்குடி டிஎஸ்பி திரு.வெங்கடேசன் போன்ற அதிகாரிகள் காவலர்களை பார்த்து சோறு திங்காத பச்சை காய்கறி தின்னு என்று ஒருமையில் பேசுவதையும் மைக்கில் காவலர்களை மரியாதை குறைவாக பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
சீர்மிகு காவல் பணியில் களங்கம் விளைவிக்கும் இது போன்ற அதிகாரிகளால் காவல்பணியில் கடந்த 4 நான்கு வருடங்களில் 300க்கும் மேற்பட்ட காவலரகள் தற்கொலை செய்துள்ளனர் மொத்தம் 1400 காவலர்கள் விபத்து நெஞ்சுலி ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். மேறும் கடந்த 12 ஆண்டுகளில் 4125 காவலர்களை சஸ்பெண்ட செய்தும் 344 காவலர்களை டிஸ்மிஸ் செய்ததும் என்பது மிகவும் வருந்ததக்க வெறும் செய்தியாக மட்டுமே வருகின்றது. தொடர்ந்து காவல்பணியில் களங்கம் விளைவித்து காவலர்களின் உயிருக்கும் நலனுக்கும் ஊறு விளைவித்து குற்றவாளிகளின் நண்பனாக விளங்கும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து பணியில் இருந்து விடுவிக்குமாறு மிகவும் மன அழுத்தத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பாஸ் இல்லாமல் இயக்கிவந்து கைப்பற்றப்பட்டு காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை அரை மணிநேரத்தில் போலியான பாஸ் தயார் செய்து மொத்தத்தில் 3 CBM கெப்பாசிட்டி அளவு கொண்ட மினி டிராக்டருக்கு 9CBM அளவு போலியாக பதிவு செய்தும் ஜல்லிக்கல் என பதிவு செய்து எம்சாண்ட் வாகனத்தை காவல் அதிகாரிகளின் உத்தரவோடு நிலைய பாரா காவலர் திரு.சுந்தர்ராஜ் அவர்கள் கொடுத்தது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகள் மீதும் காவல் உயரதிகாரிகள் மீதும் வழிமறித்து வாகனங்களை கடத்திச்சென்ற விக்னேஷ் பிஎல்ஆர் மற்றும் தாஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்னர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சிவகிரி காவல் ஆய்வாளர் அவர்கள் 19.12.24 ம் தேதி சிவகிரி தேவர் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாதுகாப்பு பணியின் போது ஆல்பா பணியாக சென்றிருந்த என்னிடம் நான் வேறு நபரின் துண்டுதலின் பேரில் இதுபோல செய்வதாகவும் அவரிடம் பேசுவது பிரச்சனையாகும் என கூறியதும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கூற வரும் நபர் உயர்திரு.முதல்நிலைக்காவலர் சைலஸ் அவர்கள் ஆவார். அவர் உயரதிகாரிகளான சிவகிரி காவல் ஆய்வாளர் திருமதி.சண்முகலெட்சுமி அவர்கள் வாங்கிய பல இலட்சங்கள் இலஞ்சம் பற்றிய ஆதாரங்களை ஆதார பூர்வமாக ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தும் காவல் கண்காணிப்பாளர் திரு.சினிவாசன் அவர்கள் உடந்தையாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக புகார் அளித்திருந்தார்.
மேலும் பல நபர்கள் மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். அவருடன் நான் பேசுவது இவர்களுக்கு தெரிய வர அவசியம் எப்படி. அவர் ஆலங்குளம் சப்டிவிசன் ஊத்துமலையில் இருக்கிறார். அப்படியிருக்க சட்டவிரோதமாக எனது அழைபேசி எண்னை ஆய்வுக்குட்படுத்தி எனது லைவ் லோகேஷனை ஆய்வு செய்வதாகவும் சந்தேகமாகிறது. எனவே எந்த ஒரு புகாரும் இன்றி தனிப்பட்ட நபரின் தொலைபேசி எண்ணை CDR போடுவது மிகப்பெரும் சைபர் குற்றமாகும் அதனையும் ஆய்வு செய்து சைபர் குற்றச்செயலில் அதன் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில் அவர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் அரசு அதிகாரிகள் அரசுக்கு விரோதமாக செயல்பட்டு பல கோடிகள் அரசுக்கு இழப்பிடு ஏற்படுத்தியும் ஒரு மலையின் முகத்தையை தகர்த்துள்ள மணல் மாபியாக்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதனுடன் அனைத்து ஆடியோ ஆதாரங்களும் விடியோ ஆதாரங்களும் புகைப்பட ஆதாரங்களும் தெரிவித்துக்கொள்கிறேன். இணைத்துள்ளேன். இதனால் என்மீது வன்முறை தாக்குதலோ வாகன தாக்குதலோ நடைபெற்றால் அதற்கு முழுகாரணம் தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களும் எனது சப்டிவிஷன் அதிகாரிகளும் மணல் மாபியாக்களும் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில் நான் வாகனங்களை கைப்பற்றி நிலையம் கொண்டுவரும் போது காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் அவர்களால் செக்போஸ்ட்ல் தகவல் சொல்லி வாகனத்தை லிமிட்டிற்குள் அனுப்ப கூடாது என எச்சரிக்கை விடுத்ததில் இருந்து மேற்படி காவல் கண்காணிப்பாளரும் இதற்கு உடந்தை என்பது தெரியவருவதால் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
தற்போது இந்த கடிதம் தமிழக அளவில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில காவல் உயர் அதிகாரிகள் காவலரையும், டிஎஸ்பி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.