பிறந்து 1 மாதமேயான குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்.!
ஒடிசா

பிறந்து ஒரு மாத காலமேயான கைக்குழந்தைக்கு மூட நம்பிக்கையால் இரும்பு கம்பியைப் பழுக்க காய்ச்சி 40 முறை சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் ஹண்டல்படா கிராமத்தில் வசித்து வந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. சில நாட்களில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்கள் குழந்தையின் உடலுக்குள் தீய சக்தி புகுந்து விட்டதாக நினைத்த நிலையில், குழந்தையை மறுத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் அதற்கு மாறாக தீயசக்தியை விரட்ட வேண்டும் என கூறி பச்சிளம் குழந்தையின் தலை,, வயிறு பகுதிகளில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.
இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி உடல்நலக்குறைவு அதிகரித்துள்ளது. குழந்தையின் நிலைமை மோசமான நிலையில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இரும்பு கம்பியால் சூடு வைத்த அடையாளங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல்கள் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.