அரசியலிலிருந்து விலகுகிறேன்.." 3 நாட்களுக்கு பிறகு ஆவேசமான பிரசாந்த் கிஷோர். !
பீகார்
பாட்னா: பீகார் தேர்தலில் ஜன் சூராஜ் கட்சி படுதோல்வியை அடைந்தது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் மீது பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், தேர்தல் தோல்விக்குப் பரிகாரமாக ஒரு நாள் மவுன விரதம் இருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியானது. 200+ இடங்களில் வென்று என்டிஏ பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தியா கூட்டணி மோசமான தோல்வி அடைந்தது. மாற்று அரசியலை முன்வைத்த ஜன் சூராஜ் கட்சியும் படுதோல்வி அடைந்தது. அக்கட்சி போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
பிரசாந்த் கிஷோர்
இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு முக்கிய கருத்துகளைக் கூறினர். பீகார் தேர்தலுக்கு முன்பு நிதிஷின் ஜேடியு 25 இடங்களுக்கு மேல் பெற்றால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
அது தொடர்பான கேள்விக்கு அவர், "நான் அப்படிச் சொன்னது உண்மைதான்.. ஆனால் நான் எந்தப் பதவியில் இருக்கிறேன் விலகுவதற்கு? நான் என்ன நடந்தாலும் மக்களுக்குப் பேசுவதை நிறுத்த மாட்டேன். நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என்று நினைப்பவர்கள் தவறு செய்கிறார்கள்.
நானே பொறுப்பு
பீகாரில் ஜன் சூராஜ் கட்சி தனது முதல் தேர்தலில் எல்லா இடத்திலும் தோற்றதற்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் இந்தப் பின்னடைவு தற்காலிகமானது தான். இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கலாம்.. ஆனால் எதிர்காலத்தில் எங்கள் வெற்றி உறுதியானது. நான் பீகாரை விட்டு வெளியேற மாட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த நாங்கள், இப்போது இரு மடங்கு உழைப்போம்.
மவுன விரதம்
பீகார் மக்களுக்கு ஏன் மாற்றம் தேவை என்பதை மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்ப்பதில் தவறு செய்துவிட்டேன். இந்த தவறுக்கு 100% நான் தான் பொறுப்பு. இந்த தவறுக்கு பரிகாரம் தேடும் வகையில் நவம்பர் 20ம் தேதி காந்தி பித்திஹர்வா ஆசிரமத்தில் பரிகாரமாக ஒரு நாள் மௌன விரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் இந்த முறை சில தவறுகள் செய்திருக்கலாம்.. ஆனால் பிளவுபடுத்தும் அரசியல் அல்லது அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கும் குற்றத்தைச் செய்யவில்லை.. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.. யாராக இருந்தாலும் முயற்சியைக் கைவிடும் வரை தோல்வியடைய மாட்டீர்கள்" என்றார்.
நிதிஷ் வெற்றி தொடர்பாகப் பேசிய அவர், "தேர்தல் நடக்கும்போதே ₹40,000 கோடி அரசு பணத்தைச் செலவிட்டுள்ளனர். நமது நாட்டில் இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை.. என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையைப் பெற்றதற்கு இது ஒரு முக்கிய காரணம்" என்றார். முதலமைச்சர் மகளிர் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் தேர்தல் பெண்களுக்குப் பணம் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், "ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 60,000 வாக்குகளை ₹10,000 கொடுத்து வாங்கியதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்" என்றார்.
அரசியலில் இருந்து விலகுகிறேன்
நிதிஷ் குமார் தேர்தல் வாக்குறுதியின்படி 1.5 கோடி பெண்களுக்கு ரூ.2 லட்சத்தை வழங்கினால்.. அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். அவர் மேலும், "நிதிஷ் அரசு 1.5 கோடி பெண்களுக்கு ₹2 லட்சம் வழங்கினால், நான் நிச்சயம் அரசியலை விட்டு வெளியேறுவேன்.. அவர்கள் மட்டும் இந்த ஒரு திட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால், அரசியல் மட்டுமல்ல.. நான் பீகாரை விட்டே சென்றுவிடுவேன்" என்றும் சவால் விடுத்தார்.
மேலும், "வாக்கு திருட்டு" என்பது இந்தியா முழுக்க ஒரு பிரச்சினையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேசிய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
