சார் வயசான அப்பா- அம்மா இருக்காங்க, இரக்கம் காட்டுங்க" கெஞ்சிய 9 போலீஸார்! நீதிபதி சொன்ன வார்த்தை.!

சாத்தான் குளம்

சார் வயசான அப்பா- அம்மா இருக்காங்க, இரக்கம் காட்டுங்க" கெஞ்சிய 9 போலீஸார்! நீதிபதி சொன்ன வார்த்தை.!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கெஞ்சியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டு, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி, சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவர்களுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த 9 பேரிடமும் தனித்தனியாக அவர்களது கருத்தை நீதிபதி முத்துக்குமரன் கேட்டார். அப்போது அவர்கள், "நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை, எதிர்பாராதவிதமாக நடந்த உயிரிழப்பு, எங்கள் குடும்ப நலன், பெற்றோர் நலன் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நீதிபதி, ஒவ்வொருவரின் குடும்பச் சொத்து, கல்வித் தகுதி, கடைசியாக பெற்ற ஊதியம் உள்ளிட்ட விவரங்களை தனித்தனியாக கேட்டு பதிவு செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 9 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் தனித்தனியாக வாதிட்டனர். அப்போது அவர்கள், "இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு இல்லை.தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்ற வகையில்தான் தண்டனை இருக்க வேண்டும்.

ஒருவன் திருந்தவே மாட்டான். இந்த உலகில் வாழ தகுதியில்லாதவன் என்று முடிவுக்கு வரும் போதுதான் தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். எனவே தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சிபிஐ தரப்பு வாதம் செய்கையில், குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். இதையடுத்து கொல்லப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி, நீதிபதி முன் ஆஜராகினார்.

அப்போது "எந்த தவறும் செய்யாத என் கணவரையும் மகனையும் அடித்துக் கொலை செய்துவிட்டார்கள். அவர்கள் மீது ஒரு சிறு வழக்குக் கூட கிடையாது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி தனது தீர்ப்பில், "இந்த செயல் மனித கண்ணியத்தை மீறுவதாக இருக்கிறது. சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை நீதிமன்றம் சாதாரணமாக கடந்து விட முடியாது. இவர்களை திருத்துவதற்காக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது என இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த குற்றவாளிகளின் வயதையும் குடும்பச் சூழலையும் காரணம் காட்டி இவர்களை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் நல்ல மனநிலையில்தான் இருந்து இந்த குற்றத்தை செய்துள்ளார்கள். இவர்கள் படித்தவர்கள், இவர்கள் மீது எந்த கருணையும் காட்ட முடியாது என தெரிவித்தார்.