நடிகர் விமல் சொந்த ஊரில் பங்களா வீடு கட்டியுள்ளார்.
Cinema

நடிகர் விமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு பங்களா ஒன்றைக் கட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள சாலைகள் எல்லாம் பை பாஸ் ஆகிவிட்டன. ஆனால், விமல் ஊருக்குப் போகும் சாலை இருபுறம் குளிர்ச்சியாக நிழல் தரும் புளியமரங்களை வரிசையாகப் பார்க்க முடிகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள பன்னாங்கொம்பு தான் நடிகர் விமலின் சொந்த ஊர். இங்கேதான் விமலின் இரண்டு அடுக்கு கொண்ட பங்களா இருக்கிறது. இந்த ஊரிலேயே பெரிய வீடு என்றால் அது இவருடையதுதான். நடிகரான பிற்பாடு இதை விமல் கட்டி இருக்கிறார். இங்கே இப்போது அவரது உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வாகை சூடவா' இவரது நடிப்புக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' நல்ல கமர்சியல் ஹிட் கொடுத்தது. விஜய்யின் 'கில்லி' உள்ளிட்ட சில படங்களில் சின்ன ரோலில் நடித்த விமல், 'பசங்க' படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக அமைந்தது.
விமலுக்கு சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது? அவர் உறவினர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்? அவரது உறவினர்கள் யார் இந்த ஊரில் வசிக்கிறார்கள்? இதைப் பற்றி எல்லாம் மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தக் கிராமத்தில் விமலின் பெரியப்பா மகன் லக்ஷ்மி நாராயணன் வசித்து வருகிறார். அவர் தனது தம்பியின் வளர்ச்சி பற்றிப் பேசுகையில், "என்னுடன் பிறந்த தம்பி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுந்தர். அடுத்து என் சித்தப்பா பையன் விமல். மூன்று பேருமே கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தோம். இப்போது விமல் மட்டும் சென்னையில் மனைவி மற்றும் பிள்ளைகளோடு இருக்கிறான்" என்கிறார்.
10 ஆம் வகுப்புதான் படித்தான். அதன் மேல் சினிமா ஆர்வத்தால் சென்னைக்கு வந்துவிட்டார். இவரது அப்பா அவருக்கு முன்பாகவே ஒப்பந்ததாரராக இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். லக்ஷ்மி நாராயணனும் சென்னையில் ஒப்பந்ததாரர் தான். குடும்ப தொழில் மீது விமலுக்கு ஆர்வம் இல்லை. சினிமா தான் குறி என இருந்துள்ளார். அவரை கலா மாஸ்டரிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள லக்ஷ்மி நாராயணன் தான் கொண்டு போய் சேர்த்துவிட்டுள்ளார்.
அதன்பின்னர் வெற்றி பெற்றது யாவும் விமலின் சொந்த முயற்சிதான். அவர் கூத்துப்பட்டறையில் இணைந்த பிறகே நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என விமலின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.