லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்கிய வி.ஏ.ஓ .!
வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பட்டாபிராமன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியில் தமிழரசன் என்பவரிடம் வீட்டு மனை வாங்கி உள்ளார். பின்னர் அதில் வீடு கட்டி வசித்துள்ளார். தொடர்ந்து அவர் அதை தனது மனைவி சரஸ்வதி (வயது 55) பெயருக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். ஆனால் 20 ஆண்டுகளாக அந்த இடத்தின் பட்டா தமிழரசன் பெயரிலேயே இருந்துள்ளது.
இந்தநிலையில் சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பான விண்ணப்பம் அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலரான சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஷர்மிளா என்பவர் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து அவர் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுகுறித்து வேலூர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரஸ்வதியிடம் வழங்கி, ஷர்மிளாவிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதனிடையே சரஸ்வதி நேற்று மதியம் 12 மணி அளவில் அலமேலுமங்காபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று தான் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை ஷர்மிளாவிடம் வழங்கியிருக்கிறார். அதை அவர் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். தொடர்ந்து அவரிடம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.
வி ஏ ஒ ஷர்மிளா ஓய்வு பெற சில மாதங்களே உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.