பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்.!

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்.!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக இந்த டோக்கன்கள் நியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த பணிகள் காலை முதல் ஆரம்பமாகியிருக்கின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ரேஷன்தாரர்கள்: அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.. இதன்மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் இன்றுமுதல் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே, இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் செய்ய துவங்கியிருக்கிறார்கள்.

பரிசுத்தொகுப்பு: இந்த டோக்கன்களில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.. தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளார்... அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும், பரிசு தொகுப்பு விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

தயார்நிலை: மேலும், பொங்கல் முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.