கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தொன்மையின் சான்றுகளை ஆவணப்படுத்தி வருகிறது , வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியமும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தொன்மையின் சான்றுகளை ஆவணப்படுத்தி வருகிறது.
கபிலன் அவர்கள் வராகசந்திரத்தில் 5 நடுகற்கள் முன்னால் தலைவர் நாராயணப்பா நிலத்தில் புதையுண்டு கிடப்பதாக கூறியதன் அடிப்படையில் குழுவின் ஆலேசகர் கோவிந்தராஜ் தலைமையில் சென்னசந்திரத்தை அடுத்த வராகசந்திரத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மண்ணில் 5 நடுகற்கள் புதைந்து இருந்ததை கண்டு இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதன் அடிப்படையில் 3/9/25 அன்று சென்னசந்திரத்தை அடுத்த வராகசந்திரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமநாதன் ஆகியோர் நில உரிமையாளரின் அனுமதியின் பேரில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 5 நடுகற்களை எடுத்து வந்து அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
ஒப்படைக்கப்பட்ட அனைத்து நடுகற்களும் சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்டனவாகும். அப்போது நடந்த ஒரு சண்டையில் இறந்த வீரர்கள் மற்றும் அவர்களுடன் உடன்கட்டை ஏறிய அவர்களது மனைவிமார்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களாகும். இவற்றில் சிறப்புவாய்ந்தது குதிரை வீரனின் நடுகல்லாகும். இதில் வீரன் குதிரையின் மீதமர்ந்து கம்பீரமாய் வாளை ஓங்கி சண்டையிடும் பாவனையில் காட்டப்பட்டுள்ளான். அருகில் ஒருவன் குதிரையை பிடித்துள்ளான். மற்றவன் தன் கையில் கண்ணாடியை பிடித்துள்ளான். குடை, கொடி, சாமரம், விசிறி போன்று கண்ணாடியும் தலைவனைக் குறிக்கும் அடையாளமாகும்.
கோயில்களில் இறைவனுக்குக் காட்டும் 16 மங்கலப் பொருட்களுள் கண்ணாடியும் ஒன்றாகும். அருகே இவனது மனைவி கையில் வாழைப்பழம் போன்ற ஒரு பொருளை கையில் வைத்துள்ளார். எனவே போரில் இறந்த முக்கிய தலைவனுக்கும் அவனுடன் இறந்த மனைவிக்குமான நடுகல் என்று இதனைக் கூறலாம்.
அடுத்த நடுகல்லில் ஒரே மாதிரி இரண்டு வீரர்கள் ஒரு கையில் குறுவாளும் மற்ற கையில் வாளை ஓங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர். அருகே அவர்களுடன் உடன்கட்டை ஏறிய மனைவியரும் காட்டப்பட்டுள்ளனர்.
அடுத்த நடுகல்லில் இரண்டு வீரர்கள் ஒன்றுபோலவே ஒரு கையில் வாளும் மறு கையில் கேடயத்தையும் கொண்டு போருக்கு செல்லும் கோலத்தில் காட்டப்பட்டுள்ளனர். அடுத்த நடுகல்லில் வீரன் ஒருவன் கையில் வாள் மற்றும் குறுவாளுடன் போர் கோலத்தில் காட்டப்பட்டுள்ளான்.
5 வது நடுகல்லில் ஒரு பெண் ஒரு கையில் மதுக்குடுவை மற்றொரு கையில் வாழைப்பழம் போன்ற பொருளுடன் காட்டப்பட்டுள்ளார். இவருக்குப் பின்னால் ஒரு வளைவு காட்டப்பட்டிருக்கிறது. இதே போன்ற வளைவு தனியே உள்ள வீரனுக்கும் காட்டப்பட்டுள்ளதால் இவ்விருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம். பொதுவாக இருவரையும் தனித்தனிக் கல்லில் வடிப்பது அரிதானதாகும்.
இந்த ஐந்து நடுகற்களும் ஒரே இடத்தில் காணப்படுவதோடு ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த கலை அமைதியில் காணப்படுவதாலும் கல்வெட்டுச் சான்று இல்லையென்றாலும் ஒரே போரில் இறந்த வீரர்களுக்கானவை இவை என்பது தெரியவருகிறது.
இது போன்று பாதுகாப்பற்ற நிலையில் நடுகற்கள், தொல் பொருட்கள் இருப்பின் 8680958340 எண்ணுக்கு தகவல் அளிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்வில் நாராயணமூர்த்தி, விஜயகுமார், பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கடலரசு மூர்த்தி, அருங்காட்சியக பணியாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ