தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது.. ஆந்திராவில் சிக்கினார்.!

சவுக்கு சங்கர் கைது

தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது.. ஆந்திராவில் சிக்கினார்.!

சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

தன்னை முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டதாக கூறிய சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதையடுத்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளி வந்த சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐக்கு மாற்றக் கோரி மனு

சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீன் முடிவதால், அவர் சரண் அடைய வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர் மீது போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சவுக்கு சங்கர் சரண் அடையாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அதே நேரத்தில் யூடியூப்பில் வீடியோக்களையும் சவுக்கு சங்கர் பதிவிட்டு வந்தார். இந்த சூழலில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஆந்திராவில் சவுக்கு சங்கர் கைது

இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ விசாரணை கோரியுள்ள இரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, சவுக்கு சங்கர் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டதாக கூறி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.