இப்போது உங்களை கொல்லப் போவதில்லை, சரணடையக் கூறிய டிரம்புக்கு ஈரான் பதில்.!
ஈரான்-இஸ்ரேல்

ஈரானின் வான் பகுதி எங்களது முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஆகையால் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி உடனடியாக சரணடைய வேண்டும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அணு குண்டுகளை தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்கும் வகையில் ஈரானோடு அணு ஆயுதக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இறங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டவில்லை. இதனையடுத்த கடந்த 13ம் தேதி நள்ளிரவு ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தது.
ஈரானில் இதுவரை 224 பேர் உயிரிழப்பு
இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்தது. இதனையடுத்து ட்ரோன் மற்றும் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை அரங்கேற்றியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. 6வது நாளாக நேற்றும் போர் நீடித்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஈரானில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு ஈரான் தரப்பிலும் பதிலடி கொடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரான் வான்வெளி இப்போது முழுமையாக அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா அதிபர் எச்சரிக்கை
இந்நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக ஊடகமான Truth Social பக்கத்தில்: ஈரானின் உச்ச தலைவர் என அழைக்கப்படும் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பதை அமெரிக்கா நன்கு அறியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு. ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்கட்டும். அவரை இப்போதைக்கு நாங்கள் கொல்லப்போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும். ஈரானின் அணுசக்தி பிரச்னைக்கு ஒரு உண்மையான முடிவு தேவை என தெரிவித்துள்ளார்.
அயதுல்லா அலி காமெனி பதிலடி
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் தொடங்குகிறது, சியோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது, பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக பலத்துடன் இயங்க வேண்டும், சமரசத்துக்கு வாய்ப்பில்லை. டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கோட்டை வாயிலில் படைகள் வாள் ஏந்தி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக கமேனி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.