வேங்கைவயல்.. 'எந்த அடிப்படையில் பழி சுமத்துறீங்க'.. பா ரஞ்சித்திற்கு திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் பதிலடி.!
வேங்கைவயல்

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் குற்றவாளிகள் 3 பேரும் தலித் சமூகத்தினர் ஆவார்.இந்த குற்றப்பத்திரிக்கைக்கு பிரபல இயக்குனரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா ரஞ்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். யாரைக் காப்பாற்ற யாரைப் பலி கொடுப்பது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பதிலடி கொடுத்துள்ளார்.
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இந்த குற்றப்பத்திரிக்கைக்கு எதிராக பிரபல இயக்குனரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான ப ரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று (நேற்று) சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.
வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை. இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது.
உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு பா ரஞ்சித் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணதுரை,எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் பலவற்றை சமூக நல்லிணக்கத்தை சிதைக்க உதவும் கருவியாகவே எதிர்க்கட்சிகள் பயன்படுத்த முயன்று தோல்வியை சந்தித்திருக்கின்றன. அப்படியொரு முயற்சி தான் வேங்கை வயல் சம்பவத்திலும் அரங்கேறி கொண்டிருக்கிறது.
கீறல் விழுந்த ரெகார்டு போல எல்லா சம்பவங்களிலும் ஒரே குற்றச்சாட்டு, "உண்மை குற்றவாளிகள் பாதுகாக்கப் படுகிறார்கள்". சிறுமி லாவண்யா வழக்கு, அண்ணன் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு முதல் இப்பொழுது வேங்கைவயல் வரை தமிழ் நாடு போலீசார் மீது களங்கத்தை மட்டுமே கற்பித்து வருகின்றனர்.
இந்த விசாரணை அறிக்கையை ஏற்று கொள்ள முடியாது என்கிறார் பா. ரஞ்சித், இரண்டு வருடங்களாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்காமல், திடீரென விழித்துக் கொண்டு இவர்கள் தான் குற்றவாளிகள் என தமிழக போலீஸ் சொல்கிறது என்கிறார். ஐயா இரண்டு வருடங்களாக விசாரணை செய்ததால் தான் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பழி சுமத்துகிறீர்கள்? யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் திமுக இல்லை. மக்களிடையே அபரிதமான செல்வாக்கை பெற்றிருக்கிறது திமுகவின் ஆட்சி.
அண்ணன் ஆர்ம்ஸ்டிராங்க் கொலை வழக்கிலும் இப்படிப்பட்ட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பின்னர் தமிழக போலிசாரின் விசாரணை எப்படி உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியது என்பதனை நினைவு கூர்கிறேன். தலித் நலன்களுக்காக திமுகவை விட வேறு எந்த அரசியல் கட்சி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும்? அண்ணல் அம்பேத்கர் பெயரில் இந்தயாவிலேயே முதல் முறையாக கல்லூரி ஆரம்பித்ததிலிருந்து, அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு முதல், திமுகவின் சாதனைகள் அளப்பரியது." இவ்வாறு சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.