தென்காசி வழக்கறிஞரை கொலை செய்த நபர் இரயிலில் பாய்ந்து தற்கொலை. !
தென்காசி
தென்காசியில் கடந்த 3 தேதி அரசு வழக்கறிஞரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த முத்துக்குமாரசாமி (46). இவர் தனது அலுவலகத்தில் வைத்து பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமியின் எதிர் வீட்டு சேர்ந்த லாரி உரிமையாளரான சிவசுப்பிரமணியன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இதற்கிடையே சிவசுப்பிரமணியனின் மனைவி மற்றும் மைத்துனர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிவசுப்பிரமணியன் மட்டும் எங்கே சென்றார் என்பது தெரியாததால் அவர் கையில் செல்போன் கொண்டு செல்லாததால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட பல பகுதியில் தொடர்ந்து 8 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த 4 தேதி நாமக்கல் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயிலில் அடிபட்டு கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாமக்கல் மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்ற அடிப்படையில் வைக்கப்பட்டது.
சிவ சுப்பிரமணியனின் உருவத்துடன் ஒத்துப்போவதாக தகவல் கிடைத்தது. பின்னர் தனிப்படையினர் சிவசுப்பிரமணியன் உறவினர்களை நாமக்கல் அழைத்துச் சென்று உடலை பார்வையிட்டார். இதில் உயிரிழந்தது சிவசுப்பிரமணியன் தான் என்பது உறுதியானது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே போலீசார் கடந்த 4ம் தேதியே வழக்குப்பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது. அதாவது கடந்த 3ம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை கொலை செய்த மறுநாளே சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம்
கொலைக்கான காரணமும் தெரியவந்துள்ளது.
அதாவது வழக்கறிஞர் முத்துக்குமாரசாமிக்கும் சிவசுப்பிரமணியன் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் சிவசுப்பிரமணியனுக்கு தெரிய வந்ததை அடுத்து கண்டித்துள்ளார்.
இதனால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், அவர் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக மனைவி கணவரிடம் தெரிவித்ததை அடுத்து முத்துக்குமாரசாமி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
