படமெடுத்து அனைத்தையும் இழந்து நடுரோட்டில் நின்றேன் - சரவணன்
சினிமா

90களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்களிலும் நடித்தவர் சரவணன். இவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் சேலம் சரவணன் என்றே பலரும் அழைத்தார்கள்.
90களில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்தார். சூர்யன் சந்திரன், அபிராமி, பார்வதி என்னை பாரடி, செவத்த பொண்ணு, தாய் மனசு என பல ஹிட் படங்களை கொடுத்தார். விஸ்வநாத், சந்தோஷம் ஆகிய படங்களையும் அவரே தயாரித்து நடித்தார். அதில் நஷ்டமும் அடைந்தார்.
அந்த நஷ்டத்தால் நிறைய பணத்தையும், சொத்தையும் இழந்தார். சினிமாவில் நடிப்பது குறைந்து போய் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக மாறினார். சில வருடங்கள் கழித்து பாலா இயக்கிய நந்தா படத்தில் இவரின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
அந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன்பின் 6 வருடங்கள் கழித்து அமீரின் இயக்கத்தில் அவர் நடித்த பருத்தி வீரன் படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் கார்த்தியின் சித்தப்பா செவ்வாழை எனும் வேடத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார். ரஜினியே இவரை அழைத்து பாராட்டினார்.
அதன்பின், குணச்சித்திரம், காமெடி கலந்த வில்லன் என பல வேடங்களிலும் நடிக்க துவங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் வாழ்க்கையில் நடந்த பல சோக சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இப்போது தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சரவணன் 'ரெண்டு படம் தயாரிச்சேன். அதனால 3 கோடி மதிப்புல இருந்த என்னோட எல்லா சொத்துக்களையும் இழந்துட்டேன். போட்டுக்க துணி கூட இல்ல. என் அண்ணன், தம்பிங்க என்னொட டிரெஸ்ஸ கூட தூக்கிட்டு ஓடிட்டானுங்க. நான் நிர்வாணம் ஆக்கப்பட்டேன். நடுரோட்டில் நின்னேன். இப்ப திரும்பி வந்திருக்கேன் என்றால் அது கடவுளோட அருள்தான்' என பேசியிருக்கிறார் சரவணன்.