விஜய்காந்த் மகன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சினிமா

விஜய்காந்த் மகன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

விஜய்காந்தின் மகன் சண்முகப் பாண்டியன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சகாப்தம் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

2015ம் வருடம் இப்படத்தின் பூஜை நடந்து படம் துவங்கியது. விஜயகாந்த் மகன் என்பதால் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

அந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதன்பின் 3 வருடங்கள் கழித்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சண்முக பாண்டியனோடு சமுத்திரக்கனியும் நடித்திருந்தார். இந்த படத்தை பி.ஜி.முத்தையா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அதன்பின் தமிழன் என்று சொல் என்கிற படம் துவங்கப்பட்டது. அதில், விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பூஜையெல்லாம் நடந்தது. மேலும், சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. விஜயகாந்த் கலந்துகொண்ட கடைசி படப்பிடிப்பு இந்த படத்திற்காகத்தான். அதன்பின் அவர் உடல் நலம் பாதிக்கப்படவே படம் டிராப் ஆனது.

அதன்பின் அப்பாவை கவனித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தினார் சண்முக பாண்டியன். எனவே, அவர் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். அதன்பின் ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்ட படம்தான் படைத்தலைவன். அன்பு என்பவர் இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

விஜயகாந்த் மரணமடைந்த போது இந்த படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என ராகவா லாரன்ஸ் சொன்னார். ஆனால், சொன்னதை அவர் செய்யவில்லை. அவருக்காக காத்திருந்த படக்குழு ஒருகட்டத்தில் பொறுமையிழந்து படத்தையே முடித்துவிட்டார்கள். வருகிற மே 23ம் தேதி இப்படம் ரிலீஸ் என படக்குழு இன்று அறிவித்திருக்கிறது.

அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், சண்டை காட்சிகளும், யானையோடு சண்முக பாண்டியன் பழகும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. பக்கா ஆக்சன் காட்சிகளோடு இப்படம் உருவாகியிருப்பதால் படைத்தலைவன் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிதா நாயர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.