கர்நாடகாவை அடுத்து தமிழ்நாட்டிலும் தக்லைஃப் படத்திற்கு எதிர்ப்பு.!

தக்லைப்

கர்நாடகாவை அடுத்து தமிழ்நாட்டிலும் தக்லைஃப் படத்திற்கு எதிர்ப்பு.!

கன்னட மொழி பற்றி அவதூறாக பேசி விட்டதாக கன்னட அமைப்பினர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறி வருகின்றனர்.

மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது எனவும் மிரட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்தும் தக் லைஃப் படத்திற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அந்த படத்தில் சாதிய காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கமல்ஹாசன் மணிரத்னத்தோடு, முதன்முறையாக சிம்பு இணைந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிம்பு, கமல்ஹாசன் உடன் அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டீசரும், ட்ரைலரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி என மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, ஏஆர் ரகுமான், அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' எனக் கூறியிருந்தார். கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கூறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்திருக்கிறது. மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது எனவும் மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் படத்துக்கு புதிய சிக்கலாக படத்தில் சாதிய ரீதியான காட்சிகள் இருப்பதாகவும், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில்," நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள தக்லைப் திரைப்படத்தின் முண்ணோட்டத்தில் எனது பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என கமல்ஹாசன் கூறுகிறார்.தமிழகத்தில் ஜாதி ரீதியாக பல படுகொலைகள் நடந்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் சாதி வெறி காரணமாக படுகொலை செய்யப்படுகிறார்கள். இதன் காரணமாக தெருவில் இருக்கும் ஜாதி பெயரை நீக்க வேண்டும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

ஆனால் சக்தி வாய்ந்த ஊடகமான சினிமாவில் சாதியை வைத்து விளம்பரம் மற்றும் வியாபாரம் செய்து வருகிறார்கள். கமல்ஹாசன் நடித்து 1987 ஆண்டு வெளிவந்த நாயகன் 1992 ஆண்டு வெளிவந்த தேவர்மகன் 2004 ஆண்டு வெளி வந்த விருமாண்டி போன்ற படங்களில் ஜாதி வெறி காட்சிகள் அதிகமாக இடம் பெற்று இருந்தது.தேவர் மகன் படம் வெளி வந்த பிறகு தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகரித்து பல படுகொலைகள் அரங்கேறியது. இப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை முத்துராமலிங்கம் என்று குறிப்பிடுகிறார்.

தங்களது பொருளாதார லாபத்திற்காக பொதுமக்களை பாதிக்கும் வகையில் திரையில் சாதியை தூக்கிப் பிடித்திருக்கும் கமலஹாசன் பொது மேடைகளில் சாதி இல்லை என்று இரட்டை வேடம் போடுகிறார்.படத்தின் முன்னோட்டத்திலேயே நாயக்கர் என சாதியை பெயரை உச்சரிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் ஜாதி பெயர்கள் உச்சரிக்கும் காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும் இல்லையெனில் தக்ஃலைப் திரைப்படத்தை முழுமையாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.