வேளச்சேரியில் ஜாதகம் பார்க்க சென்ற ஐடி ஊழியரிடம் 50 லட்சம் மோசடி
குற்றம்

வேளச்சேரியில் ஜாதகம் பார்க்க சென்ற ஐடி ஊழியர் தம்பதியை நல்ல காலம் பிறக்க போவதாக கூறி ஏமாற்றி 50 லட்சம் மோசடி செய்த ஜோதிடர் கைது.
தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி, பவானி தெரு, கருமாரியம்மன் நகர் விரிவை சேர்ந்தவர் கவிதா(41), இவரது கணவர் மணிகண்டன் என்பவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இருவரும் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியில் ஜோதிடர் வெங்கடசுரேஷ் என்பவரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஜோதிடன் உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதில் இருவரும் மகிழ்ச்சியில் மெய்மறந்து போயினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர் எனது நண்பர் ஒருவருக்கு 2020ம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்ததாகவும், உங்களிடம் காலி இடம் உள்ளதா என கேட்டார் நாங்களும் திருவண்ணாமலை வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் காலி இடம் இருப்பதாக கூறினோம், அதற்கு நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினார் அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
இருவரையும் அழைத்துக் கொண்டு திருமுடிவாக்கத்தில் உள்ள விஜய்பாஸ்கர் என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்று இவருடைய தந்தை டெல்லியில் RAW பிரிவில் பணிபுரிவதாகவும், பெரிய அரசியல்வாதி, அதிகாரிகள் எல்லாம் தெரியும், ஒரு 85 லட்சம் கொடுத்தால் உங்களுக்கு பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கி தருவார் என கூறியுள்ளார்.
இதை நம்பி இருவரும் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து மணிகண்டன் கணக்கில் இருந்து 29-08-2022 அன்று 50 ஆயிரம் ரூபாயும், 30-08-2022 அன்று 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், கவிதா வங்கிக் கணக்கில் இருந்து 29-08-2022 அன்று 50 ஆயிரம் ரூபாயும், 30ம் தேதி மற்றும் 31ம் தேதி 10 லட்சம் ரூபாயும், 01-09-2022 அன்று 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 50 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளனர்.
பணம் கொடுத்து வருடக்கணக்கில் ஆகியும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுப் தராமல் ஏமாற்றி வந்தனர் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டாலும் முறையான பதில் இல்லை, நேரில் சென்று கேட்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் பணம் வாங்கிக் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கித் தராமல் மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் வெங்கடசுரேஷ் மற்றும் விஜய்பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கவிதா, அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நபர்களை தேடி வந்த நிலையில் 11 மாதம் கழித்து ஜோதிடர் வெங்கடசுரஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள விஜய்பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேராசை பெரு நஷ்டம் என்பார்கள் அந்த பழமொழிக்கேற்ப நல்ல காலம் பிறக்குது என கூறிய ஜோதிடரை நம்பி, வங்கியில் தனி நபர் கடன் பெற்ற ஐடி ஊழியர் தம்பதிக்கு கெட்ட காலம் பிறந்து கடனாளிகளாக ஆனதும் 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதும் தான் மிச்சம்,
S S K