நாட்டு வெடிகுண்டு கடித்து பசுமாடு பலி 4 பேர் கைது .!
தென்காசி

தென்காசி அருகே நாட்டு வெடிகுண்டு கடித்து பசுமாடு பலி 4 பேர்கைது
தென்காசி, ஜூன். 12
தென்காசி மாவட்டம் கடையநல்லூர்,அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தள்ளனர்
தென்காசி மாவட்டம் மேலக் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது பசுமாடு கடந்த வாரம் மலம்பேட்டை தெரு மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள தென்னந் தோப்பில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது புல்தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்துள்ளது. இதனால் வெடித்து சிதறிய வெடிகுண்டால் மாட்டின் வாய் பகுதி மற்றும் தலை சிதறியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர் மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தோப்பில் காட்டுப்பன்றி களுக்காக நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருக்கலாம் என்றும், அதை மாடு கடித்ததால் வெடித்து சிதறி அதனால் மாடு இறந்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசார் நடத்திய விசாரணையில் மேலக் கடையநல்லூர் மலம்பேட்டை தெருவை சேர்ந்த பால்பாண்டி (வயது 46) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டியின் சகோதரர் சந்தனபாண்டி (வயது 40) மற்றும் அவரது நண்பர்களான பண்பொழி கரிசல் குடியிருப்பு, மேலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சுபாஷ் (வயது 20), செங்கோட்டை மேலூர் கே.சி. சாலை பரமசிவன் என்பவரது மகன் ராமசுப்பிரமணியன் என்ற ராம்ஜி (வயது 35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் ஒரு பையில் நாட்டுத் துப்பாக்கிகள் இருந்தன. அதை வைத்து இரவு நேரங்களில் இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சந்தன பாண்டி, சுபாஷ், ராம்ஜி, உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்