கட்சி வளர்ச்சி நிதி டெல்லி சேராததால் அக்காவின் கணவர் வீட்டிற்கு அமித்ஷாதான் ரெய்டு அனுப்பினாரா? அண்ணாமலையிடம் 6 கேள்விகள் கேட்டு எக்ஸ் தளத்தில் திணறடித்த திருச்சி சூர்யா
அரசியல்

பாஜவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தன் எக்ஸ் தளத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு 6 கேள்விகள் கேட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அண்ணாமலைக்கு 6 கேள்விகள், அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கங்க…. தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற நினைப்பில் எல்லாரையும் கேள்வி கேட்கும் நீங்கள், நான் கேட்கும் 6 கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசின் வருமானவரித்துறை கடந்த 3 நாட்களாக சோதனை நடத்திய திண்டுக்கல் சத்திரபட்டி செந்தில்குமாருக்கும் உங்களுக்கும் என்ன உறவு? உங்களுடைய அத்தை மகனின் மச்சானா அவர்?
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா என பல நூறு கோடி முதலீடு சட்டவிரோதமாக நடந்துள்ளது என வருமான வரித்துறை சொல்வது உண்மையா? இது நீங்கள் கொள்ளையடித்த பணமா? உங்களுடன் பிறந்த அக்காவின் கணவர் சிவக்குமாரும், சத்திரபட்டி செந்தில்குமாருடன் இணைந்து பழனி புளியம்பட்டியில் அண்ணாமலையார் சேம்பர் பிரிக்ஸ் என பல ஏக்கரில் தொழில் நடத்துவது உண்மையா? பல ஆண்டுகளாக கோடிக்கணக்கில் செங்கல் தொழில் செய்து வந்த பெரிய முதலாளிகளே செம்மண் தட்டுப்பாட்டினால் நிறுவனத்தை இழுத்து மூடி விட்டனர், உங்கள் அக்காவின் கணவருக்கு மட்டும் எஸ்.ஆர் மைன்ஸில் இருந்து இலவசமாக செம்மண் எப்படி அளவில்லாமல் கிடைக்கிறது?,
உங்களோட அக்காவின் கணவர் சிவக்குமாருக்கு (அமைச்சர் தொகுதியில்) செங்கல் சூளை அமைத்து கொடுத்து, அரசு டெண்டர்கள் வழங்கி தொழில் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறாரே சமுதாய பிரியத்திலா?
ஊரில் உள்ள எல்லாரையும் 'ரெய்டு அனுப்புவேன்' என மிரட்டும் உங்கள் வீட்டிற்கே ரெய்டு அனுப்பியது யார்? கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை உங்களது அக்கா கணவரின் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா?
பாஜ ஆட்சியில் ஒரு மாநில தலைவரின் அக்காவின் கணவர் வீட்டிலேயே ஐடி ரெய்டு நடப்பது இது தான் முதல் முறையாமே? உங்களை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டித்தான் இந்த ரெய்டா? ராஜினாமா செய்யாவிட்டால் அடுத்தது உங்கள் மாமனார் சுவாமிநாதன் வீட்டுக்கும், நண்பர்கள் சி.ஆர் சிவக்குமார் நாயர், திருநாவுக்கரசு, ஆதித்யா முத்துசாமி ஆகியோர் வீட்டிற்கும் ரெய்டு வர போகுதாமே?
விக்கிரமாதித்தன் வேதாளம் போல என்னுடைய கேள்விகள் இனிமேல் தொடர்ந்து கொண்டே இருக்கும். உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை என திருச்சி சூர்யா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.