பாகிஸ்தானில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படப் போகிறது.! இந்தியா வைத்த செக்.!
காஷ்மீர்

பாகிஸ்தானின் உயிர்நாடி என அழைக்கப்படும் சிந்து நதி மற்றும் அதன் இணை நதிகள் இந்தியா வழியாகத் தான் செல்கிறது.
இந்நிலையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் 21 கோடிக்கு மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்திருப்பதால், பாகிஸ்தான் மக்கள் தண்ணீருக்கு தத்தளிக்கும் நிலை ஏற்படும். பாகிஸ்தான் நினைத்தே பார்க்க முடியாத இடத்தில் இந்தியா கைவித்திருப்பது உலக அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) வேந்தரும், ரஷ்யாவிற்கான முன்னாள் இந்தியத் தூதருமான கன்வால் சிபல், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றிய கன்வால் சிபல், தனது பதிவில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) காலவரையின்றி இந்தியா நிறுத்தி வைக்க வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது; மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது; இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
21 கோடி மக்களின் குடிநீர்
இதில் வாகா எல்லையை மூடுவதை தாண்டி, மிகப்பெரிய விஷயம் எனற்ல், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதுதான் மிகப்பெரிய பாதிப்பை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தும். ஏனெனில் பாகிஸ்தானின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது சிந்து நதி . 21 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரம் என்றால், சிந்து நதியும், அதன் துணை நதிகளும் தான்..
இந்தியா அதிரடி
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த பார்த்தால் 1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டதிலிருந்து, சிந்து நதி பாயும் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.1948 இல் இந்தியா சிறிது காலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதைத் தடுத்தது. ஆனால் பின்னர் போர் நிறுத்தத்திற்குப் பிறகே தண்ணீர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பாகிஸ்தான் பெற்றது.
பாகிஸ்தான் புகார் .
இந்தியா தண்ணீரை நிறுத்திய உடன் 1951 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று முறையிட்டது.. பல பாகிஸ்தான் கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகத்தை இந்தியா துண்டித்ததாக ஐநா சபையில் குற்றம் சாட்டியது. ஐ.நா.வின் பரிந்துரைகளின பேரில், உலக வங்கி 1954 இல் இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியது. இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 19ம் தேதி, 1960 இல் கையெழுத்தானது.
ஒப்பந்தம்
பாகிஸ்தானின் கராச்சியில் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அயூப் கானுக்கு இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 62 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளிலிருந்து இந்தியா 19.5 சதவீத தண்ணீரைப் பெறுகிறது. பாகிஸ்தானுக்கு சுமார் 80 சதவீத தண்ணீர் கிடைக்கிறது. இந்தியா தனது பங்கில் சுமார் 90 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் 1960 இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்தானது, சிந்து பள்ளத்தாக்கை 6 ஆறுகளாகப் பிரித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையே ஒவ்வொரு ஆண்டும் சிந்து நீர் ஆணையக் கூட்டம் கட்டாயம் ஆகும்.
சிந்து நதி உரிமை எப்படி
சிந்து நதி ஒப்பந்தத்தை பொறுத்தவரை கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் மீது இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு ஆறுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் உலக வங்கியின் மத்தியஸ்தத்தால் செய்யப்பட்டது. கிழக்கு ஆறுகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றிலிருந்து இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த 168 மில்லியன் ஏக்கர் அடி நீரில், ஆண்டுக்கு 33 மில்லியன் ஏக்கர் அடி நீர் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நதிகள் பிரிப்பு
மேற்கு ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப்): தடையற்ற பயன்பாட்டிற்காக பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் இந்தியா அவற்றை உள்நாட்டு பயன்பாடு, விவசாயம் மற்றும் நீர்மின் உற்பத்தி (கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு) போன்ற வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. கிழக்கு ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லஜ்): தடையற்ற பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது
மேற்கு ஆறுகள்
மேற்கு ஆறுகளில் நீர்மின் திட்டங்களை இந்தியா செயல்படுத்தலாம். , ஆனால் குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் தண்ணீரை சேமிக்க முடியாது. மேற்கு ஆறுகள் மீது பாகிஸ்தானுக்கு முன்னுரிமை உரிமைகள் உள்ளன. அந்நாட்டின் விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கான அதன் நீர் விநியோகத்தை உறுதி செய்கிறது.
நிரந்தர சிந்து ஆணையம்
சிந்து நதி பகிர்வை செயல்படுத்தலை கண்காணிக்கவும், தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், சர்ச்சைகளைத் தீர்க்கவும் இரு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இருதரப்பு ஆணையம் நிறுவப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்கவும், நதி நீர் திறப்பில் இணக்கத்தை உறுதி செய்யவும் ஆணையம் தொடர்ந்து கூடுகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான கடைசி கூட்டம் டெல்லியில் கடந்த 2022ம் ஆண்டு மே 30-31ல் நடைபெற்றது. இரு நாடுகளும் இந்த சந்திப்பை ஒரு நல்லுறவு என்று அந்த கூட்டம் அப்போது வர்ணிக்கப்பட்டது.
நிறுத்தி வைத்த இந்தியா
பதட்டங்கள் அதிகரிக்கும் காலங்களில் சிந்து ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது அல்லது ரத்து செய்வது குறித்து இந்தியா அவ்வப்போது யோசித்து இருக்கிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்த முறை இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தண்ணீருக்காக பெரும் சிரமத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.